என் மலர்
நீங்கள் தேடியது "Womens day"
- தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி இசக்கி ராஜன் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக்காட்டோடு எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி:
நேஷனல் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மண்டல ஜூனியர் ஜேசி பயிற்சியாளர் எஸ்.ஜூஆனா கோல்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, பெண்கள் தம் செயல்களை கால நிர்ணயப்படி 'தேவை, தேவையற்றவை, முக்கியம், முக்கியமற்றவை" என 4 பிரிவுகளாக பிரித்து அதனை செயல்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதனையும், பெண்கள் முன்னேற்றமே வீட்டையும் நாட்டையும் மேன்மையடையச் செய்யும் என்பதையும் அழகாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி இசக்கி ராஜன் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக்காட்டோடு எடுத்துரைத்தார். மேலும், அவர் பேரிடர் மற்றும் ஆபத்து காலங்களில் பெரும் குரல் கொடுத்தும், அவசர கால உதவி எண் 112-ஐ பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, மாணவி செண்பகலட்சுமி வரவேற்றார், மாணவி எஸ்.சோபியா சிறப்பு விருந்துனரை அறிமுகம் செய்தார். மாணவி ஸ்வேதா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் ஆலோசனையின் படி தேசிய மாணவர் படை அதிகாரிகள் கேப்டன் என்.பி.பிரகாஷ், லெப்டினன்ட் ஜி.ஆர்.ஹேமலட்சுமி மற்றும் தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.
- அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.
- நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் அ.ம.மு.க. மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நிலையிலான மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
- மாநகர ஆயுதப்படை வளாகத்தில் பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமில் பெண் போலீசாருக்கு மகப்பேறு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர ஆயுதப்படையில் உள்ள பெண் போலீசாருக்கு மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
முகாமில் பெண் போலீசாருக்கு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, எடை மற்றும் உயரம், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மகப்பேறு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.
- இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.
பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவது தான் மாடல் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெண்ணினக் காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.
'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்போ' என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம். பெண்ணுரிமை காப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார்.
- இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது என்றார்.
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
- குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Blessed with baby girl ❤️ pic.twitter.com/nnVDqJjDGs
— Umesh Yaadav (@y_umesh) March 8, 2023
மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
- மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிகரம் அமைப்பு செயலாளர் லட்சுமி மவுலி தலைமை தாங்கினார். கவிமன்ற தலைவர் கலாவிசு முன்னிலை வகித்தார். தலைவர் சந்திரமவுலி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சிகரம் தொட்ட மகளிர் விருதை பிரேம பஞ்சகாந்தி சித்ரலோக, கல்பனா ஜெயராமன், ஆனந்தி, எலிசபெத்ராணி, சுபா வைஷ்ணவி, கும்சி, அஸ்வினி, அமலாதேவி ஆகியோருக்கு வழங்கினார். டாக்டர் விஜயகுமாரி வாழ்த்தி பேசினார்.
இதில், மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் காயத்ரி தொகுத்து வழங்கினார். புனிதா நன்றி கூறினார்.
விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சிகரம் அமைப்பினர் செய்திருந்தனர்.
- மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
- அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.
சென்னை:
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டிகள் 10 இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.
வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு போட்டி தொடங் குகிறது. 11, 14, 17, 25, 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
ஓபன் பிரிவு போட்டியான இதில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் admin@tnsaa.in என்ற இ-மெயிலில் (97915 28636) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகம் முழுவதும் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆண்களுக்கு தரப்படும் மதிப்பும், மரியாதையும் எங்களுக்கும் தரப்பட வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண் களுக்கு தரப்பட வேண்டும் என்று, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பெண்கள் போராடியதன் தொடர்ச்சியாக உருவானது தான் உலக மகளிர் தினம்.
அணுவின்றி எதுவும் அசையாதோ, அதேபோல் பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை. சகோதரியாக, மனைவியாக, தாயாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணி வேராகத் திகழ்பவர்கள் பெண்கள்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். இது, நூற்றுக்கு நூறு உண்மை. பெண்களால் மட்டும்தான், ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும். சிறந்த குடும்பங்களின் மாண்பும் பெண்களால்தான் பெருமை கொள்கிறது.
நாமும் இந்த தருணத்தில் பெண்களை போற்றி பெருமை கொள்வோம்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும்.
- குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.
சென்னை:
மகளிர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு இன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆணுக்கு நிகர் பெண் என மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.
இன்று வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும். அப்படி செய்யும்போது அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள். உங்கள் வளர்ச்சியுடன் தேச நலனும் பின்னியுள்ளது என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.
குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல. வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகள் உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
+3
- பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.
- இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவை:
உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் "பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த மண் காப்போம். இதற்காக அவர் உலகம் முழுக்க பயணித்து கோவை திரும்பியபோது பேரூர் ஆதீனம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் காப்போம் இயக்கத்தின் இந்த நிகழ்ச்சி மகளிருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது" என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திட்ட விளக்க உரை வழங்கிய மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 25 வருடங்களாக மண் வள மேம்பாடு, அதன் மூலம் மனித ஆரோக்கியம், விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்கள் செய்து வருகிறது.
பெண்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். இது துவக்கம் தான். இதில் தங்களுக்கு திறக்கும் வாய்ப்புகள் வழியாக உங்களை வெற்றிக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்றார்.
மண்வாசனை நிறுவனத்தின் மேனகா பேசுகையில், தினமும் மூன்று வேளை சமைப்பதையே பலரும் வாழ்வின் இலக்காக வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். நீங்கள் சொல்வதை செய்ய விரும்புகிறோம். ஆனால் வாழ்வாதாரம் பற்றி உள்ள பயத்தை அவரிடம் சொன்னோம். அதற்கு அவர், 'உங்கள் வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக் கொள்ளும்' என்றார். அந்த ஒரு வார்த்தை எங்களை இன்று வரை நகர்த்துகிறது.
பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை நேரடியாக தரும்போது உட்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.
இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தளவிற்கு சிறுதானிய உணவுகளுக்கான அதிமுக்கியமான தேவை உள்ளது, என்றார்.
அவரைத்தொடர்ந்து மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜோஸ்பின் மேரி, நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் யமுனாதேவி ஆகியோரும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.
மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.
பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கேள்வி பதில் பகுதியும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- உலகில் வாழும் 90% மக்கள் பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
- அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது.
பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் கனிந்து வருவது ஆரோக்கியமான விசயம். +2 தேர்வு முடிவுகளைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஐ.டி கம்பெனிகளை எட்டிப் பார்த்தால் இளம்பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். கார்ப்ரேட் ஆஸ்பிடல்களில் பெண் டாக்டர்களே அதிகம்.
இந்நிலையில், இப்போது யார் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள்? என்கிறார்கள். சமீபத்தில் ஐநா ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உலகில் வாழும் 90% மக்கள் (இதில் பெண்களும் சேர்த்து) பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இதில் அதிக அளவில் பாலின பேதத்தை கடைபிடிக்கும் நாடாக ஜிம்பாவேவையும், பாகுபாடு குறைந்த அளவில் கடைபிடிக்கும் நாடாக ஐரோப்பிய நாடான ஆண்ட்ரோராவையும் அடையாளம் கண்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு, கடமையுணர்வு, தொழில்துறை அறிவு போன்றவை ஆண்களுக்கு உரித்தானது என 70% இந்திய ஆண்கள் இவ்வாய்வில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.
உலகில் 231 நாடுகள் உள்ளன. இதில் 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகளே அரசியலில் பிரகாசிக்கின்றனர். நாகரிகத்தில் முன்னேறியவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள், பெண்களை அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்று கருதுகின்றனர்.
அதேவேளை கடந்த கோவிட் தொற்று காலம், இத்தகைய நிலையை சிறிது கலைத்தது.பெண் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, தைவான், நார்வே போன்ற நாடுகளில் கோவிட்-உயிரிழப்புகள் குறைவாக இருந்தன.
பெண் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, கோவிட்டுக்கு எதிராக போராடிய முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டப்பட்டதில் 70% பேர் பெண் மருத்துவர்கள். 90% செவிலியர்கள் பெண்கள். 80% தூய்மைப் பணியாளர்கள் பெண்கள்.
இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் தங்களை நிரூபித்து வந்திருக்கிறார்கள். அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களும் இன்னும் குறைந்தபாடில்லை! என்பதையும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது.
உலக அளவில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.
இந்தியாவில், 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். பெண்கள் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, எய்ட்ஸ் நோய், பெண் சிசுக்கொலை, புறக்கணிக்கப்படுவது, பணி இடங்களில் அவமதிப்பு, என பல இன்னல்களை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
அதுபோல் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையில் 193 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியா 149வது இடத்தில்தான் இருக்கிறது.
இதனால் பெண்களை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, வலிமையாக எதிர்த்து குரலெழுப்ப முடியாத நிலை உருவாகிறது. உதாரணமாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டபோது பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.
இந்தியாவில் பெண்களின் நிலை முன்னேறி உள்ளது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் யதார்த்த நிலவரம் வேறு. கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் (கேரளா விதிவிலக்கு) 10.16% பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பது, கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொடுப்பது சுமையென ஆணாதிக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.
கிராமப்புறங்களில் நிலவும் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் கற்றல் இடைநிறுத்தப்படுகிறது.பெரும்பாலான பணியிடங்களில் குறைந்த கூலிக்கே பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. காந்தி கனவு கண்டமாதிரி, இரவு நேரங்களில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடப்பது இருக்கட்டும், இணையத்தில் உலவமுடிகிறதா?
எனவே, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதென்பது, மானுடத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சுதந்திரத்தை, பாதுகாப்பை, மாண்பை, சுயமரியாதையை உறுதி செய்தவதாகும்.
-கரிகாலன்