சினிமா

நடிகை தற்கொலை வழக்கு - டி.வி.நடிகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

Published On 2018-09-06 07:35 GMT   |   Update On 2018-09-06 07:35 GMT
டி.வி. நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டி.வி. நடிகருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு டி.வி. தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டி.வி. நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வைஷ்ணவி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் போலீசில் தேவானந்த் மீது புகார் செய்தனர். அதில் தன் மகளை 2-வது தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் யாருடனும் வாழ விடமாட்டேன் என்று மிரட்டியதால், வைஷ்ணவி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறியிருந்தனர்.

இதையடுத்து தேவானந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தேவானந்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் தேவானந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் குமரேசன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அதனால், கீழ்கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
Tags:    

Similar News