சினிமா செய்திகள்

எல்லா துறையிலும் பாலியல் சீண்டல்கள் இருக்கு - குஷ்பு

Published On 2024-09-04 15:04 GMT   |   Update On 2024-09-04 15:04 GMT
  • எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது.
  • எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும்.

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் SAM-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் திருகர் நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, ஏன் சினிமா மீது மட்டும் பழி போடுகின்றீர்கள்? ஏன் யாரும் அதைப் பற்றி மட்டும் பேச மறுக்கின்றனீர்கள்?"

"ஐடி துறை, மற்ற துறைகளான மருத்துவம், கல்வித்துறை, அரசியல் என எங்கும் நடக்கவில்லையா? எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் சினிமாவை மட்டும் பிடித்துக் கொள்கின்றீர்கள்? எல்லா துறைகளிலும் கமிட்டி இருக்கனும்னு சொல்லுங்க நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை," என்று தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பட்டியல்:

பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் 1 குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விடுக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இமெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், நேரடியாக மீடியாகளில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.

Tags:    

Similar News