இந்த வருடம் 'காந்தாரா' இடத்தை பிடிக்கப்போவது 'தசரா' தான் - நடிகர் நானி
- தெலுங்கு நடிகர் நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
தசரா
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
தசரா டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் நானி
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், 'தசரா' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் நானி பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, "போன வருஷம் தெலுங்கு சினிமாவுக்கு பெருமை சேர்க்க ஆர்.ஆர்.ஆர் வந்தது. கன்னட சினிமாவுக்கு 'காந்தாரா' வந்தது. இப்போது நம்பிக்கையுடன் சொல்கிறேன்', இந்த வருடம் அது 'தசரா' தான்." என்று கூறினார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.