சினிமா செய்திகள்

வைரமுத்து

கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; மறக்க வேண்டாம் - வைரமுத்து ஆதங்கம்

Published On 2023-04-28 02:59 GMT   |   Update On 2023-04-28 02:59 GMT
  • கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
  • இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரசார கூட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்றனர். திடீரென குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார். தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கர்நாடகா மேடையில்

தமிழ்த்தாய் வாழ்த்து

பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு

இடிவிழுந்த மண்குடமாய்

இதயம் நொறுங்கியது

ஒலிபரப்பாமல்

இருந்திருக்கலாம்;

பாதியில் நிறுத்தியது

ஆதிமொழிக்கு அவமானம்

கன்னடத்துக்குள்

தமிழும் இருக்கிறது;

திராவிடத்திற்குள்

கன்னடமும் இருக்கிறது

மறக்க வேண்டாம். " என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News