சினிமா செய்திகள்

சமுத்திரகனியை ஆபாச வார்த்தைகளால் திட்டிய வனிதா விஜய்குமார் - அந்தகன் பட விழா

Published On 2024-08-05 09:26 GMT   |   Update On 2024-08-05 09:26 GMT
  • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
  • படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் தியாகராஜன் ,பிரசாந்த், சமுத்திரகனி, சிம்ரன், வனிதா விஜயகுமார், பெசன்ட் ரவி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சமுத்திரகனி பேசியதாவது:-

நான் தியாகராஜனின் தீவிர ரசிகன். நான் தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த போதே மலையூர் மம்பட்டியான் படத்தை போட்டு பார்த்து ரசித்திருக்கிறேன்.

அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. திடீரென நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தியாகராஜன் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறினார்.

ஏன் எதற்கு என்று கேட்பதற்குள் தியாகராஜனிடம் போனை கொடுத்து விட்டார். அவர் எடுத்ததும் நான் தியாகராஜன் பேசுகிறேன் சார் என்று கூறினார். அதைக் கேட்டதும் நான் உடனடியாக நேரில் வரட்டுமா என்றேன்.

பின்னர் விஷயத்தை கூறி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். உடனடியாக சம்மதித்து படத்தில் நடித்தேன்.

அன்று முதல் பிரசாந்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ஐயா என்று தான் அழைத்துக் கொள்வோம்.

படப்பிடிப்பில் ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை சரமாரியாக திட்டினார். தாங்க முடியாமல் நான் தியாகராஜனிடம் வனிதா ஏன் என்னை இப்படி திட்டுகிறார்?என்று கூறினேன்.

அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கையில், நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்றேன். அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என்று கூறினார்.

இவ்வாறு சமுத்திரக்கனி கூறியதும் தியாகராஜன் உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த வனிதா விஜயகுமாரிடம் சமுத்திரக்கனியை திட்டும்போது யாரை மனதில் வைத்துக் கொண்டு திட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதிலில், என் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டேன். உடனடியாக என் மனதில் தோன்றியவற்றையெல்லாம் திட்டி தீர்த்து விட்டேன். என் தந்தையும் அந்த அளவுக்கு நடிப்போடு ஒன்றிப் போய் விடுவார். அவர்தான் என் முன்மாதிரி என்று கூறினார்.

இந்த சம்பவத்தால் அந்தகன் பட விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News