அலகுமலை முருகன் கோவிலில் காப்புகட்டி கந்த சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
- வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது.
அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீகந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது.
வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் கங்கணம் அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர். சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தைகள் உள்பட பலர் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
பின்னர் அலகுமலை மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு மற்றும் திருக்கோவில் ஆன்மிகப் பேரவையினர் செய்திருந்தனர்.