வழிபாடு

மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2022-08-05 11:33 IST   |   Update On 2022-08-05 11:33:00 IST
  • அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்பவனி நடந்தது.
  • கோவில் முன்பு உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

திண்டுக்கல் அருகே உள்ள கம்பிளியம்பட்டியை அடுத்த கே.ஆண்டியபட்டியில் மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்பவனி நடந்தது. பின்னர் தண்ணீர் துறை நீராடல் முடிந்து கோவிலுக்கு அம்மன் வந்தடைந்தார். தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய ஆண், பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக பக்தி பரவசத்துடன் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷம் முழங்கியபடி பூசாரி அங்கு வந்து, தேங்காயை எடுத்து பக்தர்கள் தலையில் உடைத்தார். விழாவில் கம்பிளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News