வழிபாடு
null

சகல செல்வங்களை அள்ளித்தரும் சனிக்கிழமை விரதம்

Published On 2024-05-18 08:57 IST   |   Update On 2024-05-18 08:57:00 IST
  • இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
  • மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் இந்த விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் முதல் 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களில், சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.

இந்த சனிக்கிழமை விரதத்தை அனுசரிப்பவர்கள், காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின்போது கருமையை ஒட்டிய மலர்கள், எள்ளு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்.


இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள், அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்குச் செல்லலாம். ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம். பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால், சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

Tags:    

Similar News