வழிபாடு

திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் 94-வது குருபூஜை விழா: 108 சங்காபிஷேகம் நடைபெற்றது

Published On 2023-06-08 09:37 GMT   |   Update On 2023-06-08 09:37 GMT
  • குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
  • பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.

இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.

நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.

முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.

மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News