செய்திகள்

நக்சலைட்டுகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-09-27 04:33 GMT   |   Update On 2016-09-27 04:34 GMT
நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:

நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக இந்து அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது இரண்டு இயக்கத்துக்கும், 2 மதங்களுக்கும் நடக்கும் மோதல் இல்லை. உலக அளவில் பயங்கரவாதத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது.

1989-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே நாகராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த பதட்டம் தொடர்கதையாகி வருகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சங்கர் கணேஷ் மீது நடந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கும்.

அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. அலுவலகம் மற்றும் மாநில நிர்வாகியின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. இதனை அடுத்து மிரட்டல் கடிதமும் அனுப்பி உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடும் நிகழ்வாகும்.

எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் ஜனநாயக முறையில் சேவை செய்வதுதான் எங்கள் கடமையாகும். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பேசிய பின்புதான் கடந்த 15 நாட்களாக இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் சவாலாக ஏற்று கண்டு பிடிக்க வேண்டும்.

1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நக்சலைட்டுகளை வேருடன் அழித்தது போல தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளையும், பயங்கரவாதத்தையும் வேருடன் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News