செய்திகள்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2017-02-08 05:30 GMT   |   Update On 2017-02-08 05:30 GMT
ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவதாகவும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார்.

இதுதவிர தற்போதைய தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் தன் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருப்பதாக கூறினார். இந்த பேட்டியை அடுத்து அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.விக்கு எந்த நிலையிலும் நான் துரோகம் செய்யவில்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டான் என ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன். ஆளுநர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன்.

சட்டமன்றம் கூடும்போது எனக்கான ஆதரவு தெரியவரும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்துள்ளேன்.  என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News