செய்திகள்

அஸ்தினாபுரம் பஸ் நிலையத்துக்கு தனியார் நிலத்தை மீட்க நடவடிக்கை: தி.மு.க.வுக்கு அமைச்சர் பதில்

Published On 2017-03-22 07:32 GMT   |   Update On 2017-03-22 07:32 GMT
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பஸ் நிலையத்துக்கு தனியார் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி (தி.மு.க) துணைக்கேள்வி எழுப்பி பேசியதாவது:-

அஸ்தினாபுரம் பஸ் நிலையத்திற்கான நிலத்தை தனியார் ஒருவர் தனது இடம் என உரிமை கோரி உயர் நீதிமன்றம் சென்ற காரணத்தால் 2010-11-ல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.3 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று பல்லாவரம் நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அந்த இடம் இன்னும் தனியார் வசமே உள்ளது. அந்த இடத்தை அரசு பெற்றுத்தந்தால் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்வேன். எனவே அந்த இடத்தை நிரந்தரமாக மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கையில், பேருந்து நிலையத்துக்கான இடப்பிரச்சனை குறித்து உறுப்பினர் கூறியுள்ளதால் அந்த இடத்தை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதிப்பிரச்சனை எதுவும் இல்லை.உடனே செய்து தரப்படும் என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Similar News