செய்திகள்

வேலைக்கு செல்லாததை கண்டித்த தாயை எரித்து கொன்ற மகன்

Published On 2016-08-22 09:33 GMT   |   Update On 2016-08-22 09:33 GMT
பல்லாவரம் அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்த தாயை மகனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த திரிசூலம் எம்.ஜி.ஆர். நகர் கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் முருகன். சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வேலம்மாள்.

இவரும் மூத்த மகனும் சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

2-வது மகன் தினேஷ் (18) வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.

இதனை கண்டித்த பெற்றோர் அவரை வேலைக்கு செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனால் பெற்றோர் பேச்சை கேட்காத தினேஷ் ஊர் சுற்றியபடியே இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று மாலை வீட்டில் வேலம்மாளும், தினேசும் மட்டுமே இருந்தனர். அப்போது வேலம்மாள் தினேசை வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த தினேஷ் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து வேலம்மாள் மீது ஊற்றி தீ வைத்தார்.

தீயில் கருகி அலறிய வேலம்மாளின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர் மீது எரிந்த தீயை அணைத்து பல்லாவரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தினேசை மடக்கி பிடித்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலம்மாளை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வேலம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்ட தினேஷ் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News