செய்திகள்

திண்டுக்கல் அருகே லாரி மீது பைக் மோதல்: பெண் உடல் நசுங்கி பலி

Published On 2016-08-22 11:49 GMT   |   Update On 2016-08-22 11:49 GMT
திண்டுக்கல் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன் கண்முன் மனைவி பலியானார்.

வடமதுரை:

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பில்லுபட்டியை சேர்ந்த ராசு மகன் மருதமுத்து என்ற சரவணன் (வயது31). இவரது 2-வது மனைவி செல்வி (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மருதமுத்து மனைவி செல்வியுடன் மோட்டார் சைக்கிளில் கோயம்புத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே செல்வி உயிரிழந்தார்.

சரவணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே விபத்து நடந்த இடத்தில் லாரியை அகற்றாமல் போலீசார் மெத்தனமாக இருந்ததாலேயே உயிரிழப்பு நடந்ததாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், காலையில் இருந்தே பழுதாகி நின்ற லாரியை அகற்ற டோல்கேட் ஊழியர்களும், வடமதுரை ஹைவே ரோந்து போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களது அலட்சியத்தால்தான் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்று வாகனங்கள் பலமணி நேரம் நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை போலீசார் தடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. வடமதுரை போலீசார் பழுதாகி நின்ற லாரி டிரைவரான விருவீட்டை சேர்ந்த நாகத்தேவர் (41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News