செய்திகள்

திண்டுக்கல் அருகே பார்சல் சர்வீஸ் லாரியை கடத்தி டீசலை திருடிச் சென்ற கும்பல்

Published On 2016-09-27 05:48 GMT   |   Update On 2016-09-27 05:48 GMT
திண்டுக்கல் அருகே பார்சல் சர்வீஸ் லாரியை கடத்தி டீசல் திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல்:

சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் லாரி ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் நாமக்கல் வழியாக திருச்சி சென்றது. நாமக்கல் அருகே லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் ரங்கன் அருகில் உள்ள ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார்.

திரும்பி வந்தபோது லாரியை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் யாரோ லாரியை கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து அவர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சோதனை சாவடிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தேடி வந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பாளையம் என்ற இடத்தில் அனாதையாக ஒரு லாரி நின்றிருந்தது. லாரியில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் மூலம் அதனை பார்த்தவர்கள் லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அதுபற்றி குஜிலியம்பாறை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

விசாரணையில் அந்த லாரி நாமக்கல்லில் கடத்தப்பட்டது என தெரிய வந்தது. கடத்தல்காரர்கள் லாரியில் இருந்த டீசலை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News