செய்திகள்

சேலையூரில் நகையை தொலைத்ததால் பள்ளி மாணவி தற்கொலை

Published On 2016-09-27 08:37 GMT   |   Update On 2016-09-27 08:37 GMT
சேலையூரில் நகையை தொலைத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலையூர்:

கிழக்கு தாம்பரம் அண்ணாத்துரை தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். ரெயில்வேயில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குமாரி. பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்களது மகள் விஜயலட்சுமி (17) பிளஸ்-2 மாணவி.

நேற்று பள்ளிக்கு விஜயலட்சுமி 3 பவுன் தங்க செயினை அணிந்து சென்றார். மாலை வீடு திரும்பும் போது தங்க செயினை தொலைத்து விட்டார்.

நகை தொலைந்தது பற்றி தாயிடம் விஜயலட்சுமி கூறிய போது அவர் மகளை திட்டினார். இதனால் விஜயலட்சுமி மிகவும் வருத்தத்தில் இருந்தார்.

இன்று காலை குமாரி பால் வியாபாரத்துக்கு சென்று விட்டார். தந்தை நந்தகுமாரும் வேலைக்கு சென்று இருந்தார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாய் குமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து மகள் உடலை பார்த்து கதறி அழுதார். நகையை தொலைத்தாலும், தாய் திட்டியதாலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து உள்ளார்.

இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவி உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News