செய்திகள்

சமயநல்லூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2016-10-08 10:08 GMT   |   Update On 2016-10-08 10:08 GMT
சமயநல்லூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை அகில இந்திய வங்கி பணியாளர் சங்க காலனியில் குடியிருந்து வருபவர் மாரி முத்து (வயது45). இவர் மதுரையிலுள்ள தனியார் கியாஸ் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது36), மகள் அபிநயா (வயது8) இவர்கள் இரவு தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை 2.15 மணிக்கு வீட்டின் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்ட மகேஸ்வரி தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கதவை திறந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க கால்சட்டை பனியன் அணிந்த ஒரு வாலிபர் மகேஸ்வரி கழுத்திலிருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டான்.

உடனே அவர் அய்யோ அம்மா என்று கூச்சலிட்டார். அப்போது தூங்கி கொண்டிருந்த மாரிமுத்துவும் எழுந்து வந்து தப்பியோடிய வாலிபரை துரத்தியுள்ளார். அதற்குள் அந்த மர்ம மனிதன் இருட்டுக்குள் மறைந்து விட்டான். இது சம்மந்தமாக மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News