செய்திகள்

ராஜா அண்ணாமலைபுரத்தில் சொகுசு கார் மோதி 2 மாணவர்கள் காயம்

Published On 2016-10-16 10:10 GMT   |   Update On 2016-10-16 10:10 GMT
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று காலை 6 மணி அளவில் சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களான சங்கர், சுதர்சன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விலை உயர்ந்த சொகுசு காரை ஓட்டி வந்த வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை ஓட்டிச் சென்றவர் அதிவேகத்தில் வந்து சாலையில் சாகசம் செய்தது போல காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் யார்? அவரது பின்னணி என்ன? என்கிற விவரங்களை தெரிவிக்க அடையாறு போக்குவரத்து போலீசார் மறுத்து விட்டனர்.

Similar News