செய்திகள்

மணவாளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ: கட்டிடங்கள் தரைமட்டம்

Published On 2016-10-16 17:31 GMT   |   Update On 2016-10-16 17:31 GMT
மணவாளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர் (வயது 53). இவர் மணவாளக்குறிச்சியில் இருந்து அம்மாண்டி விளை செல்லும் சாலையில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் சூப்பர் மார்க் கெட்டை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவு 1 மணி அளவில் சூப்பர் மார்க்கெட்டின் உள் பகுதியில்இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி யைச் சேர்ந்தவர்கள் முகம்மது பஷீருக்கு தகவல் தெரிவித்தனர்.

குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி அண்ணாத்துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சூப்பர் மார்க்கெட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

தீ விபத்தினால் சூப்பர் மார்க்கெட்டின் கட்டிடங்களும் சேதமடைந்து இடிந்து தரைமட்டமானது. தீ விபத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்குமென்று கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மணவாளக்குறிச்சி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News