செய்திகள்

பெண்களுக்கு சூப்பர்மேன் தேவையில்லை, நல்ல கணவன் அமைந்தாலே போதும்: மதுரை ஐகோர்ட்டு

Published On 2016-11-24 02:52 GMT   |   Update On 2016-11-24 02:52 GMT
“பெண்களுக்கு சூப்பர்மேன் தேவையில்லை. நல்ல கணவன் அமைந்தாலே போதும்“ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.
மதுரை:

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது தேனி போலீசார் பெண் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஒருவருக்கொருவர் மதிப்பளித்து உறவை மேம்படுத்தவே நீதிபோதனைகள் கூறப்படுகின்றன. எது சரி, எது தவறு என்று அறிந்து ஒவ்வொருவரும் அவரவர் குணநலன்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் திருமணமான பெண், சட்டவிரோத உறவு வைத்துக்கொண்ட மனுதாரருடன் தனது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதனால் அந்த பெண்ணின் குடும்பம் சிதைந்துள்ளது.

அந்த பெண்ணை ஆஜர்படுத்தக்கோரி அவரது கணவர் ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் கூறியதால் அந்த மனு முடித்து வைக்கப்பட்டதாக மனுதாரர் வக்கீல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போதும் அதுபோலத்தான் அவர் வெட்கம் இல்லாமல் கூறினார்.

சினிமா பாணியில் கோர்ட்டு செயல்பட இயலாது. இதற்கு முன்பு வரை விசாரணைக்கு ஆஜரான மனுதாரர் இப்போது ஆஜராகவில்லை. இதிலிருந்து அவர் இந்த பெண்ணுடனான உறவை தொடர விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனை அறிந்த இந்த பெண்ணும் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணுக்கு சூப்பர்மேன் தான் வேண்டும் என்பதில்லை. நல்ல கணவன் அமைந்தாலே போதும். இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்கு நல்ல கணவன் கிடைத்திருந்தபோதும், அந்த பெண்ணின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை.

மனுதாரர் ஏற்கனவே 2 பெண்களை ஏமாற்றி உள்ளார். அவரால் திருமணமான பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினாலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Similar News