செய்திகள்

ராமநாதபுரம் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலி

Published On 2017-01-15 15:45 GMT   |   Update On 2017-01-15 15:45 GMT
வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர் போகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது26). இவர் ஊரில் இருந்து ராமநாதபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது நாகபட்டினத்தை நோக்கி சென்ற டாடா சுமோ கார் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் அதே இடத்தில் பலியானார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). மீன்பிடி தொழிலாளி. திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் தன் நண்பர் நம்புகுமார் (24) என்பவருடன் உச்சிப்புளிக்கு சென்று கொண்டிருந்தார். திருப்புல்லாணி அருகே உள்ள சங்கட்டியான்வலசை பக்கத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன் அதே இடத்தில் பலியானார். நம்புகுமாரும், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரமேஷ் என்பவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து இன்ஸ் பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை அருகே சிந்தாமணியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பால்பாண்டி (25). இவரது நண்பர் வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ். இருவரும் காஞ்சரன்குடியில் ஒரு சிமெண்டு கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் கடந்த 11-ந் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். காஞ்சரன்குடி அருகே சென்றபோது ராமேசுவரம் நோக்கி வந்த மினிலாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேஷ் அதே இடத்தில் பலியானார்.

படுகாயம் அடைந்த பால்பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News