செய்திகள்

சோழவரம் அருகே போலீஸ் பூத்தை நொறுக்கிய 7 பேர் அதிரடி கைது

Published On 2017-01-25 06:41 GMT   |   Update On 2017-01-25 06:41 GMT
சோழவரம் அருகே போலீஸ் பூத் நொறுக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றம்:

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 23-ந் தேதி போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியபோது வன்முறை வெடித்தது. மாணவர்கள் மீது போலீசார் தாக்கியதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

சோழவரத்தை அடுத்த அனுமந்தை கூட்டுச் சாலையிலும் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அருகே இருந்த போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கினர்.

இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் பூத்தை நொறுக்கியதாக அருமந்தை, வீச்சூர், வழுதிகைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ரமேஷ், சூரியபிரகாஷ், சகாதேவன், காமேஷ், உமாபதி, மில்லர், மற்றொரு ரமேஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். போலீஸ் பூத் நொறுக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News