செய்திகள்

தென்தாமரைகுளம் அருகே தொழிலாளியை வெட்டி கொல்ல முயற்சி: வாலிபர் கைது

Published On 2017-01-25 13:38 GMT   |   Update On 2017-01-25 13:38 GMT
தென்தாமரைகுளம் அருகே செலவுக்கு பணம் கேட்ட தகராறில் தொழிலாளியை வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 42). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மாலையில் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக பொற்றையடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சோரிஸ் ஆண்டனி கிஷோர் (32), ஆண்டனி நிசாந் (21) ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் அந்தோணியிடம் செலவுக்கு பணம் கேட்டனர். அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சோரிஸ் ஆண்டனி கிஷோர், ஆண்டனி நிசாந் ஆகியோர் அவரது சட்டைப்பையில் இருந்து ரூ.500 பறித்துக் கொண்டனர்.

இதையடுத்து பணம் கேட்டால் தரமாட்டாயா? என கூறி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணியை வெட்ட முயன்றனர். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தோணி விலகிக் கொண்டு கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.

இதுகுறித்து தென் தாமரைக்குளம் போலீசில் அந்தோணி புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து  சோரிஸ் ஆண்டனி கிஷோரை கைது செய்தனர். ஆண்டனி நிசானை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News