செய்திகள்

கலிதீர்த்தாள்குப்பத்தில் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைது

Published On 2017-02-01 12:00 GMT   |   Update On 2017-02-01 12:00 GMT
கலிதீர்த்தாள்குப்பத்தில் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைதானார்கள்.

திருபுவனை:

திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 31). தொழிலாளி.

தமிழக பகுதியான வாக்கூரில் இவரது உறவினர் வசித்து வருகிறார். அவரது இல்ல விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, சத்தியசீலன் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 3 நாட்கள் கழித்து திரும்பி வந்தபோது, அவர்களுடைய வீட்டு கதவு திறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த சத்தியசீலன் குடும்பத்தினர் பதட்டத்துடன் வீட்டுக்குள் சென்றனர்.

அந்த வீட்டில் இருந்த பீரோவும் திறந்திருந்தது. அதில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.

நகை கொள்ளை குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், நகையை கொள்ளையடித்தது அதே பகுதியை சேர்ந்த முரளி (21), திருபுவனையை சேர்ந்த பிரதீப்குமார் என்பதும், ஒரு சிறுவன் அவர்களுக்கு உதவியதும் தெரியவந்தது.

அதன்பேரில் முரளி, பிரதீப்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நெக்லஸ் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

Similar News