செய்திகள்

திருப்பூரில் செல்போன் கடையில் திருட்டு வடமாநில வாலிபர் கைவரிசை?

Published On 2017-03-03 12:47 GMT   |   Update On 2017-03-03 12:47 GMT
செல்போன் கடையில் பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்:

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர் திருப்பூர்- தாராபுரம் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் செல்போன் கடையில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதுபோல் தெரியவந்தது.

அக்கம் பக்கத்தினர் இது குறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு விரைந்து வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன் திருட்டுபோனது தெரியவந்தது.

இது குறித்து கடை உரிமையாளர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் வடமாநில வாலிபர் இந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் கம்பன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 20). இவர் காந்திபுரம் 1-வது வீதியில் செல்போன்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மோகன்ராஜ் வழக்கம் போல கடை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 7 செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 68 ஆயிரம்.

இது குறித்து மோகன்ராஜ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News