செய்திகள்

குளச்சலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருட்டு

Published On 2017-03-03 16:17 GMT   |   Update On 2017-03-03 16:17 GMT
குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் இருந்த 4 பவுன் நகையை யாரோ திருடிச்சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:

குளச்சலை அடுத்த அழகன்பாறை, ஆத்திகோட்டு விளையை சேர்ந்தவர் கபிரியேல். இவரது மனைவி அமலோற்பவம் (வயது 73). மூதாட்டியான இவர் நேற்று வீட்டில்  இருந்து உறவினரை பார்க்க குளச்சல் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.

அப்போது 4 பவுன் எடையுள்ள தனது தாலி செயினை கழற்றி கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்தார். குளச்சல் பஸ் நிலையம் வந்து சேர்ந்ததும் அவர் கைப்பையை திறந்து பார்த்தார்.

அதில் அவரது 4 பவுன் நகையை காணவில்லை. பதறிபோன அமலோற்பவம் கதறி அழுதார். அங்கிருந்தவர்களிடம் தனது நகையை ஓடும் பஸ்சில் யாரோ திருடிவிட்டதாக கூறினார்.

அக்கம் பக்கத்தினர் அவரை குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்  தனது நகை மாயமானது பற்றி புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர்கள் தனிஸ்லாஸ், தாமோதரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓடும் பஸ்சில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மற்றும் மூதாட்டிகளை குறிவைத்து ஒரு கும்பல் நகை திருட்டில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஓடும் பஸ்களில் இச்சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. தற்போது குமரி மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் விசேசங்கள் அதிகஅளவில் நடந்து வருகிறது.
இதில் நகை அணிந்து வருவோரை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.           

Similar News