செய்திகள்

சேரன்மகாதேவியில் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

Published On 2017-03-22 06:44 GMT   |   Update On 2017-03-22 06:44 GMT
வாழைக்கு போதிய விளைச்சல் இல்லாததாலும், விலை குறைவாலும் நஷ்டம் அடைந்த விவசாயி தற்கொலை செய்த கொண்டார்.
சேரன்மகாதேவி:

சேரன்மகாதேவி மாவடி மேலத்தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான அரை ஏக்கர் வயல் கூனியூர் அருகே உள்ளது. அதில் மூக்காண்டி வாழை பயிரிட்டிருந்தார். போதிய தண்ணீர் இன்றி வாழை விளைச்சல் குறைவாக இருந்துள்ளது.

மேலும் சந்தையில் வாழைத்தார்களுக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மூக்காண்டி பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட வாழையால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வயலுக்கு சென்ற மூக்காண்டி மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே மூக்காண்டியின் செருப்புகள் கிடந்தன. அதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என நினைத்த உறவினர்கள் இது குறித்து சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சேரன் மகாதேவி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று கிணற்றில் இருந்து மூக்காண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளைச்சல் இல்லாததாலும், விலை குறைவாலும் நஷ்டம் அடைந்த வாழை விவசாயி தற்கொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மூக்காண்டிக்கு சரஸ்வதி என்ற மனைவியும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Similar News