செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. எங்கள் வசமாகும்: மா.பா.பாண்டியராஜன் பேச்சு

Published On 2017-04-06 10:25 GMT   |   Update On 2017-04-06 10:42 GMT
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குபின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. நமது வசமாகும் என்று மா. பா. பாண்டியராஜன் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக அவைத் தலைவர் இ.மது சூதனனை ஆதரித்து அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு ஆதரவாக மீனாம்பாள்நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை விளக்கியும் பல்வேறு பகுதிகளிலும் நிறைவேற்ற உள்ள வாக்குறுதிகளை எடுத்து கூறி ஆதரவு திரட்டி வருகிறார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் அண்ணன் மதுசூதனன், அம்மாவின் ஆசி பெற்ற அவரை தேர்ந்தெடுத்தால் இத்தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவார்.

இத்தேர்தல் எதிர் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வா? சாவா? போராட்டம். தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியால் முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க முடியும். பண பலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. மக்கள் நம்மீது காட்டும் அன்பு தேர்தலில் வெற்றி மாலையாகும். தேர்தல் முடிவுக்குபின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. நமது வசமாகும்.

அம்மாவின் நல்லாட்சி அண்ணன் பன்னீர்செல்வம் தலைமையில் தொடர்ந்து நடைபெறும் என்று பேசினார். அவருக்கு அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News