செய்திகள்

சத்தியமங்கலத்தில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Published On 2017-04-06 11:27 GMT   |   Update On 2017-04-06 11:27 GMT
சத்தியமங்கலத்தில் இன்று டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
சத்தியமங்கலம்:

டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்திலும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியினரும் பல்வேறு இயக்கத்தினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பவானியில் கொ.ம.தே.க.சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இன்று டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் கடைவீதி, அத்தாணி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

மாலை 5 மணி வரை கடைகள் மூடப்பட்டிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் இன்று சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடையை மீறி மறியல் நடத்துபவர்கள் கைது செய்யக்கூடும் என்பதால் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News