செய்திகள்

ராஜபாளையத்தில் மதுக்கடையை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-04-17 06:06 GMT   |   Update On 2017-04-17 06:06 GMT
ராஜபாளையத்தில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம்:

ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் இருந்த மதுக்கடை உச்சநீதி மன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக ராஜபாளையம் பொன்னகரம் ஆசிரியர் காலனி குடியிருப்பில் மதுக்கடையை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கடை அமைக்கக்கூடாது என அதிகாரிகளிடமும் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இதையறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் காலனி குடியிருப்பில் இருந்து ஊர்வலமாக சென்று சத்திரப்பட்டி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சரவணன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடை அமைக்கப்படாது என அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Similar News