செய்திகள்

மதுரையில் முன் விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2017-05-11 12:05 GMT   |   Update On 2017-05-11 12:05 GMT
மதுரையில் முன் விரோத தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மேல அனுப்பானடி குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் வழிவிட்டான் (வயது 22). இவர் நேற்று இரவு வாழைத்தோப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் மர்ம கும்பல் வந்தது. அவர்கள் வழிவிட்டானை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர்.

பலத்த காயமடைந்த வழிவிட்டான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கீரைத்துறை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட வழிவிட்டான் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் தரப்பினர் தான் வழிவிட்டானை தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.

வழிவிட்டான் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். நண்பருக்காக சேகரின் வீடு புகுந்து அவரது தம்பி மணிகண்டன் என்பவரை தாக்கியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சேகர், அவரது சகோதரர்கள் வேல்முருகன், மணி மற்றும் தோக்கு மணி பிரபு, சபரிநாதன் உள்பட 9 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News