செய்திகள்

சீர்காழி அருகே வி.சிறுத்தை-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்கள் உடைப்பு

Published On 2018-05-30 10:04 GMT   |   Update On 2018-05-30 10:04 GMT
சீர்காழி அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை மர்ம கும்பல் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் மருவத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அப்பகுதியில் டியூப் லைட்டுகளை கட்டி வைத்திருந்தனர். இதை நேற்று இரவு ஒரு மர்ம கும்பல் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மருவத்தூர் கிராமம் காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வி.சிறுத்தை கட்சிகளின் கொடிகம்பம் உடைக்கப்பட்டு சேதப்படுத்த பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர்.

இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் சேதப்படுத்த பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடிகம்பம் உள்ளது. இதையும் மர்ம கும்பல் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினரும் பார்வையிட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கொடி கம்பங்களை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News