செய்திகள்

வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிளை திருடி செல்போன் பறித்த 2 பேர் கைது

Published On 2018-10-28 12:05 GMT   |   Update On 2018-10-28 12:05 GMT
வளசரவாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடி அதன் மூலம் செல்போன் பறித்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

போரூர்:

சென்னை வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு வளசர வாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

உடனடியாக மற்றொரு பைக்கில் துரத்திச் சென்ற போலீசார் அவர்களை பிடித்தனர் அவர்கள் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 19) மற்றும் 10-ம் வகுப்பு பள்ளி மாணவரான 15 வயது சிறுவன் என்பதும் பைக்கிற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங் களில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்கை திருடி அதன் மூலம் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் திருடிய பைக்கை வேறு ஏதாவது ஒரு பகுதியில் கொண்டு விட்டுவிட்டு செல்வதும் தெரியவந்தது.

உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7பைக் மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News