செய்திகள்
கொலை

புழலில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்

Published On 2019-12-26 08:34 GMT   |   Update On 2019-12-26 08:34 GMT
புழலில் இன்று அதிகாலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை பேலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்:

புழல், திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் வெற்றிவேலன். பாடியில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சஜினி (வயது 38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருப்போரூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர். வெற்றிவேலனும், சஜினியும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இரவு முழுவதும் வாக்குவாதம் நீடித்தது. இன்று அதிகாலை வரை தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை 5 மணிஅளவில் கணவன்- மனைவி இடையேயான தகராறு மோதலாக வெடித்தது.

இதில் ஆத்திரம் அடைந்த வெற்றிவேலன் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி சஜினியை சரமாரியாக குத்தினார்.

கழுத்து, மார்பு, வயிற்றில் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்த சஜினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

இதையடுத்து வெற்றிவேலன் புழல் போலீசில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் தங்கத்துரை அவரை கைது செய்தார்.

வெற்றிவேலனுக்கும், சஜினிக்கும் இடையே நீண்ட காலமாகவே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவி மீது வெற்றிவேலனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சஜினி கணவரை பிரிந்து கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சஜினியை சமாதானம் செய்து வெற்றிவேலன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தார்.

இந்த நிலையில் தான் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிவேலன் கத்தியால் குத்தி மனைவி சஜினியை கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

தீர்த்துகட்டுவதற்காகவே மனைவியை வெற்றிவேலன் அழைத்து வந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News