செய்திகள்
கோப்பு படம்.

பொள்ளாச்சியில் கலப்பட மசாலா பொருட்கள் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’

Published On 2020-05-06 14:54 GMT   |   Update On 2020-05-06 14:54 GMT
பொள்ளாச்சியில் கலப்பட மசாலா பொருட்கள் தயாரித்த குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் கூட்செட் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் கலப்பட மசாலா பொடி தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக சப்-கலெக்டர் வைத்திநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்- கலெக்டர் வைத்திநாதன் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் அந்த குடோனுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மிளகாய் கழிவுகள், ரேசன் அரிசி, மல்லி கழிவு போன்ற வற்றை அரைத்து மிளகாய் தூள், சாம்பார் தூள் உள்ளிட்ட பல்வேறு மசாலா பொருட்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பொருட்களை விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நேதாஜி ரோட்டை சேர்ந்த தங்கராஜ் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் கழிவு மிளகாயை கொண்டு பல்வேறு மசாலா பொருட்களை தயாரித்து வந்துள்ளனர். மேலும் நல்ல மிளகாயுடன் கழிவு மிளகாய்களை சேர்த்து அரைத்து விற்று வந்துள்ளனர். மஞ்சள் தூளுடன் ரேஷன் அரிசி மாவை கலந்து விற்றுள்ளனர் என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த 4 ஆயிரத்து 500 கிலோ கலப்பட மசாலா பொருட்கள், 600 கிலோ ரேசன் அரிசி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News