செய்திகள்
காய்கறி சந்தை

காய்கறி சந்தையை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

Published On 2020-05-13 12:41 GMT   |   Update On 2020-05-13 12:41 GMT
ஆரல்வாய்மொழியில் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, செயல் அலுவலர் ஜெயமாலினியை சந்தித்து, காய்கறி சந்தையை இடமாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் காய்கறி மற்றும் மீன் சந்தை அழகியநகர் பகுதியில் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் காய்கறி சந்தை மட்டும் நகர பூங்காவை ஒட்டிள்ள சாலை பகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது ஊரடங்கில் சிலவற்றை தமிழக அரசு தளர்த்தியது. இதனால் இயல்பு நிலைக்கு திரும்பியதை போன்று வாகனங்கள் அதிகமாக சென்றது. எனவே, வாகனங்கள் செல்ல வசதியாக காய்கறி சந்தையை மீண்டும் வேறு இடத்திற்கு, அதாவது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு எடுத்தனர். இந்த முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செயல் அலுவலர் ஜெயமாலினியை சந்தித்து, காய்கறி சந்தையை இடமாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். மேலும், ஏற்கனவே இடம் மாற்றம் செய்ததால் வியாபாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றினால் வியாபாரமே இருக்காது. எனவே சந்தையை இடம் மாற்றக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்பதாக அதிகாரி தரப்பில் கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News