செய்திகள்
முக கவசம்

முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-06-12 10:10 GMT   |   Update On 2020-06-12 10:10 GMT
முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறியுள்ளார்.
கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக முதல்- அமைச்சர் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அதேபோல் இருசக்கர வாகனங்களில் வரும் போதும், பொது இடங்களுக்கு செல்லும் போதும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு அபராதமாக ரூ.100 விதிப்பதோடு, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கையும் தொடரப்படும். மேலும் அனைத்து ஷோரும்கள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் மக்கள் செல்லும்போதும், ஒரே நேரத்தில் கடையில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.

பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும். எனவே, பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தவும், வெளியிடங்களில் முக கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News