செய்திகள்
கோப்புபடம்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2020-10-03 15:20 GMT   |   Update On 2020-10-03 15:20 GMT
பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பர்கூர்:

பர்கூர் ஒன்றியம் சூலாமலை ஊராட்சி குரும்பர்கொட்டாய் கிராமம். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதை தீர்க்க கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சூலாமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குரும்பர்கொட்டாய் பகுதியில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த மோட்டார் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பழுதானது. அதன்பின் அதை சீர்செய்யாததால் நாங்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டபட்டு வருகிறோம். இது குறித்து பலமுறை ஊராட்சியில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News