செய்திகள்
நம்ம சென்னை செல்பி மேடை

‘நம்ம சென்னை’ செல்பி மேடையில் ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள்

Published On 2021-01-29 09:11 GMT   |   Update On 2021-01-29 09:11 GMT
சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 24 லட்சம் செலவில் உருவான ‘நம்ம சென்னை’ செல்பி மேடையில் ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களை மகிழ்வதற்காக ரூ. 24 லட்சம் செலவில் ‘நம்ம சென்னை’ செல்பி மேடை மாநககராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கட்டமைப்புகளை போன்று சென்னை மெரினாவில் ‘நம்ம சென்னை’ செல்பி மேடையை நிபுணர்கள் வடிவமைத்து உருவாக்கி உள்ளனர்.

இந்த ‘செல்பி மேடை’ பலத்த சூறாவளி காற்றையும் தாங்கும் சக்தி கொண்டது. இது 2.5 டன் எடை கொண்டது ஆகும். இந்த திட்டத்துக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ பணி நிதி அளித்துள்ளது. ‘நம்ம சென்னை’ சென்னை மாநகரத்தின் வளர்ச்சியின் ஓர் அடையாளமாக காணப்படுகிறது.

இந்த ‘நம்ம சென்னை’ செல்பி மேடை 28 அடி அகலம், 10 அடி உயரம், 2 அடி தடிமன் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் எழுத்து கலவையாக ‘நம்ம சென்னை’ சிவப்பு, வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இந்த ‘செல்பி மேடை’யை நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

‘நம்ம சென்னை‘ செல்பி மேடையில் கடற்கரைக்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் செல்போன்களில் ’செல்பி’ எடுத்து வருகின்றனர்.

இந்த ‘செல்பி மேடை’ மெரினா கடற்கரையில் அனைவரையும் கவரும் வகையில் கண்கவர் வண்ணத்தில் காணப்படுவதால் ஏராளமான மக்கள் அதனை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News