செய்திகள்
தாக்குதல்

திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மீது தாக்குதல்- ஆட்டோ டிரைவர் கைது

Published On 2021-05-20 08:57 GMT   |   Update On 2021-05-20 08:57 GMT
கோவையில் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை கணபதி கே.கே. நகரை சேர்ந்த 36 வயது பெண். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட இவரது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணின் மகனை கணபதி மாநகரை சேர்ந்த ஆட்டோ ஜெயசந்திரன் என்கிற சுபாஷ் (31) என்பவர் தினசரி பள்ளிக்கு அழைத்து செல்வார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணை சந்தித்த ஜெயசந்திரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து மறுத்து விட்டார். ஆனால் ஜெயசந்திரன் தினசரி பின் தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசந்திரனை அழைத்து தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அப்பெண் ஆட்டோ டிரைவருக்கு தெரியாமல் வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இது ஜெயசந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று பெண் கூட்டுறவு அங்காடியில் வேலை செய்து கொண்டு இருந்தார். அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்த ஜெயசந்திரன் தகாத வார்த்தைகளால் பேசி இளம்பெண்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து அப்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் ஜெயசந்திரன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News