செய்திகள்
படகுடன் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்

Published On 2021-06-30 10:16 GMT   |   Update On 2021-06-30 10:16 GMT
பட்டினமருதூர் பகுதியில் ஒரு மினிவேனில் இருந்து பைபர் படகிற்கு 85 மூட்டைகளில் 2½ டன் எடையுள்ள விரலி மஞ்சளை கும்பல் ஏற்றிக் கொண்டிருந்தது.
தூத்துக்குடி:

இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் அங்கு மஞ்சள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மஞ்சள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு அதிக அளவில் விரலி மஞ்சள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், உள்ளூர் போலீசார், கியூ பிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை 2 மணிக்கு பட்டினமருதூர் பகுதியில் ஒரு மினிவேனில் இருந்து பைபர் படகிற்கு 85 மூட்டைகளில் 2½ டன் எடையுள்ள விரலி மஞ்சளை கும்பல் ஏற்றிக் கொண்டிருந்தது.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் கடலில் குதித்து தப்பி சென்றனர். விசாரணையில் அது இலங்கைக்கு கடத்த முயன்றதும், அதன் மதிப்பு ரூ. 15 லட்சம் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன், மோட்டார் சைக்கிள் மற்றும் பைபர் படகு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பி ஓடியவர்கள் யார்-யார்? எங்கிருந்து மஞ்சள் கடத்தி செல்லப்பட்டது? அதில் தொடர்புடையவர்கள் யார்? என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



Tags:    

Similar News