செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆதார் - பான்கார்டுகள்.

திருப்பூரில் கைதான வங்கதேச வாலிபர்களிடம் போலி ஆதார் - பான் கார்டுகள் பறிமுதல்

Published On 2021-08-20 10:04 GMT   |   Update On 2021-08-20 10:04 GMT
பின்னலாடை நிறுவனங்களில் கடந்த ஓராண்டாக டெய்லராக வேலை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கிளிபாளையம் கிராமத்தில் உரிய ஆவணமின்றி வங்கதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங் சாய் உத்தரவின் பேரில் மங்கலம் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் புக்கிளிபாளையம் கிராம த்தில் விசாரணை நடத்தினர். அப்போது வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அங்கு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து பதுங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது உசல்மியா (வயது 33), முகமது மொட்லிப் (26), அஷ்ரோபுல் (20), சையது உல்லா இஸ்மாயில் (24) மற்றும் பார்கத் உசேன் (27) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் களிடம் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக 5 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் கடந்த ஓராண்டாக டெய்லராக வேலை செய்து வந்ததாக தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் போலியான ஆதார்கார்டு, பான் கார்டுகளுடன் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி ஆதார், பான் கார்டுகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களுடன் வேறு யாராவது திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ளனரா? என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News