செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் வருகை

Published On 2021-11-01 06:18 GMT   |   Update On 2021-11-01 06:18 GMT
முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வேலூர்:

தமிழகம் முழுவதும் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க விழா மற்றும் வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

விழாவில் மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை அகதிகள் குடும்பங்கள் உள்பட 3,510 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியை 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
 அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் மேல்மொணவூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ.48 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, 162 பேருக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பணக்கொடை உயர்த்தி வழங்குதல், சுயஉதவிக்குழுக்களுக்கு உயர்த்தப்பட்ட சுழல்நிதி வழங்குதல், புத்தாடைகள், பாத்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து காரில் வேலூருக்கு புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் வேலூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இரவு அங்கேயே தங்குகிறார். நாளை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.



முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), வருண்குமார் (திருவள்ளூர்) ஆகியோர் மேற்பார்வையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல்-அமைச்சர் காரில் வருவதால் சென்னை-பெங்களூரு சாலையோரம் வேலூர் மாவட்ட பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவில் நலத்திட்ட உதவிகள் பெறும் இலங்கை அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் உடல் வெப்பநிலை விழா தொடங்கும் முன்பாக பரிசோதனை செய்யப்படும்.

அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றால் மட்டுமே முதல்-அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் விழாவில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News