உள்ளூர் செய்திகள்

ஆதிக் அகமது படுகொலை- சரத்குமார் கண்டனம்

Published On 2023-04-17 08:37 GMT   |   Update On 2023-04-17 08:37 GMT
  • பொதுவெளியில், ஊடகங்களுக்கு முன்பாக, மக்களுக்கு முன்பாக உத்தரபிரதேசத்தில் நடந்தேறிய இச்சம்பவம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  • கொலை சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாத வகையில் வழக்குகளின் தன்மைகளை ஆராய்ந்து, செயல்பாடுகளை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, வக்கீல் உமேஷ்பால் கொலை தொடர்பாக போலீசாரின் கண்காணிப்பில் இருந்த நிலையில் ஊடகங்களிடம் பேசிக் கொண்டிருந்த போது கேமரா முன்பாக பலத்த காவல் பாதுகாப்புகளுக்கு இடையே மர்மநபர்கள் 3 பேர் திடீரென இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் பேரதிர்ச்சி அளிக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1989 முதல் 2004 வரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் பதவி வகித்த ஆதிக் அகமது மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றாலும் கோஷ்டி மோதல் போன்று இரு தரப்பினர் கொலை செய்து வருவதில் அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

பொதுவெளியில், ஊடகங்களுக்கு முன்பாக, மக்களுக்கு முன்பாக உத்தரபிரதேசத்தில் நடந்தேறிய இச்சம்பவம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்திற்குள்ளான பிரச்சினை என்றாலும், மத்திய அரசு தலையிட்டு பொதுமக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இது போன்ற கொலை சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாத வகையில் வழக்குகளின் தன்மைகளை ஆராய்ந்து, செயல்பாடுகளை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News