உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை தீக்குளிக்க முயற்சி

Published On 2023-07-10 15:51 IST   |   Update On 2023-07-10 15:51:00 IST
  • மாட்டின் உரிமையாளர் குடும்பத்தினர், சந்தியா மற்றும் சிந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
  • சகோதரிகள் 2 பேரும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளனர்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் உள்ள காந்திபுரி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தியா(வயது 23), சிந்தியா(21). இவர்கள் 2 பேரும் சகோதரிகள்.

இதில் சந்தியாவின் ஒன்றரை வயது பெண் குழந்தையை அதே பகுதியை சேர்ந்த ஒருவருடைய மாடு முட்டியதாகவும், இதனால் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாட்டின் உரிமையாளர் குடும்பத்தினர், சந்தியா மற்றும் சிந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சகோதரிகள் 2 பேரும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பெறாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் 2 பேரும் நேற்றிரவு திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர். இதனையடுத்து தாலுகா காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News