உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி கொலை

Published On 2024-07-02 04:17 GMT   |   Update On 2024-07-02 04:17 GMT
  • விசாரணையில் இறந்து கிடந்தவர் மாயமான முரளி என தெரிய வந்தது.
  • டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு:

ஈரோடு கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் முரளி (26). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யஸ்ரீ. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் முரளி கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யஸ்ரீ கணவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை சாஸ்திரி நகர் அருகே ரெயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் முட்புதர் அருகே சென்று பார்த்த போது கழுத்தில் வெட்டு காயத்துடன் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் மாயமான முரளி என தெரிய வந்தது. அவரது கழுத்தில் ஆழமான காயம் இருப்பது தெரிய வந்தது. அவரது உடல் அருகே சில மது பாட்டில்களும் இருந்துள்ளன. போலீசார் விசாரணையில் முரளி பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் முரளியின் மனைவி வித்யஸ்ரீ தனது கைக்குழந்தையுடன் சம்பவ இடத்திற்கு வந்து முரளி உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் முரளி உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடம் அருகே மது பாட்டில் இருந்ததால் மது தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News