செய்திகள்

மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: இத்தாலி கடற்படை வீரர் லத்தோரை தாய் நாட்டிலே தங்கியிருக்க கோர்ட் அனுமதி

Published On 2016-09-28 11:57 GMT   |   Update On 2016-09-28 11:57 GMT
கேரள மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி கடற்படை வீரர் மாசிமிலனோ லத்தோரை தாய் நாட்டிலே தங்கியிருக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு என்ற 2 இந்திய மீனவர்களை அம்பலப்புழா கடல் பகுதியில் சுட்டுக்கொன்றனர்.

இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள இத்தாலி கடற்படை வீரர்கள் தாய் நாட்டிலே தங்கியிருக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தாய் நாட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது லத்தோர் தாய் நாட்டிலேயே தங்கிக் கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. கேரள மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை குறித்து ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் இத்தாலிய கடற்படை வீரர்கள் மாசிமிலனோ லத்தோர், சால்வடோர் கிரோனி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்த வீரர்களில் உடல் நலக்கோளாறு காரணமாக சால்வடோர் கிரோனி ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். பின்னர், லத்தோருக்கும் ஜாமீன் கிடைத்து இத்தாலி சென்றார்.

Similar News