செய்திகள்

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு

Published On 2016-10-29 12:46 GMT   |   Update On 2016-10-29 12:46 GMT
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க அந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகரி:

ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க அந்த மாநில போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் செம்மரங்கள் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. செம்மர கடத்தல்காரர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அங்குள்ள கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 83 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 42 செம்மர கட்டைகளும், 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைதான தமிழர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் கடப்பா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 83 பேரும் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள்.

Similar News