செய்திகள்

அபுதாபி இளவரசருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு - பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

Published On 2017-01-25 06:38 GMT   |   Update On 2017-01-25 06:38 GMT
அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள அபுதாபி நாட்டு இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நயான் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு பின்னர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி:

இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இதையொட்டி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக அவர் நேற்று புதுடெல்லி வந்தடைந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டித்தழுவி வரவேற்றார்.

டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்றுகாலை அபுதாபி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு மரியாதையை ஏற்றுகொண்ட அவர் டெல்லி ராஜ்கட் பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தார். அவருடைய மனைவியான அபுதாபி இளவரசியும் உடன் வந்திருந்தார்.



அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் மகாத்மா காந்தியைப் பற்றிய தனது உயர்வான கருத்தை பதிவு செய்து கையொப்பமிட்ட முஹம்மது பின் சயீத் அல் நயானுக்கு காந்தியின் பொன்மொழிகள் கொண்ட பதாகை நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு பின்னர், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு சென்ற அவர் அங்கு இந்தியா-அபுதாபி இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.



இந்த ஆலோசனையின் முடிவில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News